25 Jan 2013

கட்கரி-காங்கிரஸ்-சர்வாதிகாரம்

ஒரு பொறுப்புள்ள எதிர்கட்சித் தலைவரின் பேச்சாக இல்லை கட்கரியின் "வருமான வரித்துறையை மிரட்டும்" பேச்சு.

பெரிய ஊழல் புகார்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை எளிதாகக் கையாண்டு, தனது கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச்செல்லாமல், இப்படிப் பேசி இவரது கட்சியின் வெற்றி வாய்ப்பை இவரே கெடுத்துக் கொள்வது நகைப்புக்குரியதாக இருக்கிறது.


இங்கே தமிழகத்தில் விஜயகாந்தைச் சீண்டிவிட்டு, அவரைக் கோபங்கொள்ளச் செய்து அவரது புகழை எப்படி மங்கச் செய்கிறார்களோ, அதே போலத் தான் கட்கரியின் நிலையும் அங்கே இருக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.

விஜயகாந்தாவது நடிகராய்த் திரைத்துரையில் இருந்துவிட்டு, அந்தக் காதாநாயகப் பிம்பத்தோடே அரசியலில் நுழைந்து, எதிர்க்கட்சிகளின் ராஜதந்திர அரசியலைத் தாக்குபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் என்றால், அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட கட்கரி போன்றோரும் தன்னை நோக்கி ஒரு குற்றச்சாட்டு வரும்போது சினம் கொண்டு யாரை, யார் மத்தியில், யார் மூலமாக மிரட்டுகிறோம் என்பதைப் பற்றி சிறிதிம் சிந்திக்காமல், வருமான வரித்துறைக்கு இப்படி வெளிப்படையாக மிரட்டல் விடுத்திருப்பது வெட்கக் கேடான செயல்.

கட்கரி மீதான ஊழல் குற்றச்சாட்டு மற்றும் அவரது கட்சித்தலைவர் பதவி ராஜினாமா குறித்து சேகரித்த தினகரன் செய்திகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

02.10.2012

நிலக்கரி சுரங்க முறைகேட்டில் பாஜ தலைவர் நிதின் கட்கரி, ரூ.500 கோடி ஆதாயம் அடைந்ததாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் பொது செயலாளர் திக்விஜய் சிங் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக மத்திய தலைமை கணக்கு அதிகாரி கடந்த மாதம் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இதை தொடர்ந்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய உத்தரவின்படி நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்ற 10 தனியார் நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் பாஜ எம்பி அஜய் சான்செட்டிக்கு சொந்தமான நிறுவனத்துக்கும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த வகையில் அந்த நிறுவனத்துக்கு ரூ.500 கோடி லாபம் கிடைத்திருப்பதாகவும் காங்கிரஸ் பொது செயலாளர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டினார். இந்த நிறுவனத்தில் பாஜ தலைவர் நிதின் கட்கரி பங்குதாரராக இருப்பதாகவும், நிதின் கட்கரி பரிந்துரையின் பேரில் அந்த நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டதாகவும் திக்விஜய் சிங் கூறினார்.
இதற்கு நிதின் கட்கரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அஜஸ் சான்செட்டி நிறுவனத்துக்கும் தனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த  தொடர்பும் இல்லை என்றும் திக்விஜய் சிங் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு திக்விஜய் சிங் தரப்பில் இருந்து பதில் வரவில்லை. இதை தொடர்ந்து டெல்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் திக்விஜய் சிங் மீது நிதின் கட்கரி நேற்று அவதூறு வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டில் நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். தனது தரப்பில் 9 சாட்சிகள் பெயரையும் கட்கரி குறிப்பிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

26.10.2012

பாஜ தலைவர் நிதின் கட்கரி நிறுவனத்தில், கட்டுமான நிறுவனம் செய்த முதலீடு பற்றி விசாரணை தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 1995ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை பொதுப்பணித் துறை அமைச்சராக தற்போதைய பாஜ தலைவர் நிதின் கட்கரி இருந்தார். அப்போது, ‘ஐடியல் ரோடு பில்டர்ஸ்‘ (ஐஆர்பி) என்ற கட்டுமான நிறுவனம் பொதுப்பணித் துறை ஒப்பந்தங்களை எடுத்தது. இந்த நிறுவனம் மகாராஷ்டிராவில் நிதின் கட்கரிக்கு சொந்தமானபுர்திமின் உற்பத்தி நிலையம் மற்றும் சர்க்கரை ஆலையில் அதிகளவில் முதலீடுகள் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  
‘‘இது குறித்து கம்பெனி பதிவாளர்கள் விசாரணை நடத்துவர்‘‘ என மத்திய கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கடந்த செவ்வாய் கிழமை கூறினார். இந்நிலையில் கட்கரி நிறுவனத்தின் முதலீடுகள் பற்றிய விசாரணை தொடங்கி விட்டதாக கம்பெனி விவகாரத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேபோல், கட்கரியின் நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் பற்றி வருமான வரித்துறையும் விசாரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிறுவனத்தில் 18 கம்பெனிகள் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.


23.1.2013
மும்பை : பா.. தலைவர் நிதின் கட்கரிக்கு சொந்தமான புர்தி குழுமத்துடன் தொடர்புள்ள போலி கம்பெனிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கட்கரி பா.. தலைவராக இன்று இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் நேற்று இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.  
புர்தி குழுமத்தை சேர்ந்த பல கம்பெனிகள் போலியானவை என்பது வருமான வரித்துறையினர் கடந்த அக்டோபர் மாதம் நடத்திய விசாரணைகளில் தெரிய வந்தது. இந்த கம்பெனிகளின் முகவரியும் போலியாக கொடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. வருமான வரித்துறையினர் இது தொடர்பாக கட்கரியிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். கடந்த திங்கட்கிழமை அதிகாரிகள் முன்பு ஆஜராகும்படி கட்கரி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார். ஆனால் கட்சி பணிகள் நிறைய இருப்பதால் தம்மால் தற்போது ஆஜராக இயலாது என்று கட்கரி கூறியிருந் தார். புதிய தேதி ஒன்றை நிர்ணயிக்கும்படியும் கட்கரி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து பிப்ரவரி 1ம் தேதி அதிகாரிகள் முன்பு ஆஜராகும்படி கட்கரி கேட்டுக் கொள்ளப்பட்டார்.
இதற்கிடையே பா.. கட்சி தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடக்கிறது. நிதின் கட்கரிக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு இருப்பதால் அவர் மீண்டும் கட்சி தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் வருமான வரித்துறையினர் நேற்று மீண்டும் சோதனை நடத்தியுள்ளனர். வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் இது குறித்து நிருபர்களிடம் கூறுகையில், “புர்தி குழுமத்துடன் தொடர்புடைய போலி கம்பெனிகளில் ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனைகளின் தொடர்ச்சியாகவே தற்போது சோதனைகள் நடந்துள்ளது. இந்த கம்பெனிகளின் முகவரி மற்றும் அவை என்ன மாதிரியான தொழில் செய்து வருகின்றன மற்றும் உண்மையாகவே அந்த கம்பெனிகள் உள்ளனவா என்பதை நாங்கள் சரிபார்த்து வருகிறோம். தேவைப்பட்டால் கம்பெனி இயக்குனர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்யவிருக்கிறோம்" என்றார்.

வருமான வரித்துறையின் புனே அலுவலகம் தெரிவித்த சில சந்தேகங்களை தொடர்ந்து அத்துறையின் மும்பை அலுவலகம் இந்த சோதனைகளை நடத்தியதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கட்கரியின் கம்பெனிகளில் நேற்று நடத்தப்பட்ட சோதனைகளை தொடர்ந்து அவர் மீண்டும் பா.. தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள கட்கரியை மீண்டும் தலைவராக தேர்வு செய்தால் அது கட்சியின் வெற்றி வாய்ப்புகளை பாதிக்கும் என்று எல்.கே.அத்வானி போன்ற கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கருதுகிறார்கள். ஆனால் தலைவர் பதவிக்கு கட்கரியை மட்டுமே நாங்கள் ஆதரிப்போம் என்று ஆர்.எஸ்.எஸ். கூறி வருகிறது.


24.1.2013
" எனது பெயரை கெடுக்க சதி நடந்தது. கட்சியின் நலன் கருதி, தலைவர் பதவிக்கான தேர்தலில் இருந்து விலகினேன் என்று நிதின் கட்கரி கூறினார்.தலைவர் பதவிக்கான தேர்தலில் இருந்து விலகியது குறித்து நிதின் கட்கரி கூறியதாவது:எனது பெயரை கெடுக்க அரசியல்ரீதியாக சதி நடந்தது. எனக்கு சிறிதும் தொடர்பில்லாத விஷயங்களுடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டது. மேலும், ஒன்றன் பின் ஒன்றாக என் மீது பொய் புகார்கள் கூறப்பட்டன. நேற்று முன்தினம், எனது பெயரை கெடுக்கும் வகையில், வருமானவரித்துறையினர் சோதனை என்ற பெயரில் நாடகமாடினர். என் பெயரை கெடுத்து, அதன்மூலம் கட்சியின் பெயரை கெடுக்க முயற்சிக்கும் சதியை உணர்ந்து கொண்டேன். அதனால் தலைவர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகுவது என்று முடிவு செய்தேன். வேறு ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்கும்படி கட்சியின் மூத்த தலைவர்களிடம் கூறினேன். தலைவர் பதவிக்கு ராஜ்நாத் சிங் மிகவும் தகுதியானவர். விவசாயிகளின் தலைவர். உத்தரப் பிரதேசத்தில் முதல்வராக அவர் சிறப்பாக பணியாற்றியவர். சங்பரிவார் கொள்கையின் மீது மாறாத பற்று கொண்டவர். 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கட்சியை வெற்றிப்பாதைக்கு அவர் தலைமை தாங்கி செல்வார்" என்றார்.

25.1.2013

என்னை அவமதிப்பதற்காக சதி திட்டம் தீட்டப்பட்டது. புர்தி நிறுவனத்தில் நான் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. ஆனால் என்னை ஓரம் கட்டுவதற்காக வருமானவரித் துறையை காங்கிரஸ் பயன்படுத்துகிறது. சி.பி..யை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ள காங்கிரஸ், தற்போது வருமான வரித்துறையையும் தனது கைக்குள் போட்டுக் கொண்டுள்ளது.
அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்திக்கும். பா. ஆட்சிக்கு வந்ததும், இந்த வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு வேடிக்கை காத்திருக்கிறது. எந்தெந்த அதிகாரிகள் சோதனை யிட்டார்கள் என்பது எனக்கு தெரியும். அவர்கள் எங்கேயும் ஓடி ஒளிய முடியாது. அவர்களை சோனியா, சிதம்பரத்தால் காப்பாற்ற முடியாது. டெல்லி தலைவர்களின் முகத்திரையை விரைவில் கிழிப்பேன். வாரிசு அரசியல் நடைபெறும் காங்கிரசில் ஒருவர்தான் எஜமான், மற்றவர்கள் எல்லாம் வேலையாட்கள். சிபிஐ மூலம் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவையும், பகுஜன் சமான் கட்சி தலைவர் மாயவதியையும் காங்கிரஸ் மிரட்டி வருகிறது. அரசியல் பிரச்னைகள் எல்லாம் என் வாழ்வில் ஒரு பகுதி. அதை கண்டு நான் கலங்கப்போவதில்லை. இவ்வாறு கட்கரி கூறினார்.
- நன்றி தினகரன்

பாஜகவில் தலைவர் தேர்தல் நடைபெறும் நேரத்தில், நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கீழ் வரும் வருமான வரித்துறை கட்கரியின் அலுவலகங்களைச் சோதனைக் குள்ளாக்கியிருப்பது, காங்கிரஸ் எப்படி சிபிஐ-யையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்துகிறது என்பதை நாடறியச் செய்திருக்கிறது.

இந்தத் துறைகளைத் தன்னிச்சைப்படி நடத்தி, எப்படியெல்லாம் கூட்டணிக் கட்சிகளையும், எதிர்க்கட்சிகளையும் பாடாயப் படுத்துகிறார்கள்? முலாயம் சிங் யாதவ், லல்லுபிரசாத் யாதவ், மாயாவதி, எடியூரப்பா, ராஜா, கனிமொழி என்று அந்தப் பட்டியலில் இருக்கும் நபர்கள் அனைவருமே காங்கிரசை எதிர்த்து அரசியல் நடத்தியவர்கள்தான். ஆனால், அதில் முக்கால்வாசிப் பேர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரசிற்கு வக்காலத்து வாங்கும் அளவிற்கு அவர்களைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது காங்கிரஸ்.

அதற்காக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளான இவர்களனைவரும் சத்தியவான்கள் உத்தமர்கள் என்று கூற வரவில்லை. காங்கிரஸ் கட்சியிலேயே இவர்களை விட பெரும் ஊழல்வாதிகளை வைத்துக் கொண்டு, அவர்களுக்கு ஒரு சட்டம், கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு சட்டம் என்றால் இது மன்னர்கால அரசாங்கம் போலல்லவா செயல்படுகிறது!

"அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்திக்கும். பா. ஆட்சிக்கு வந்ததும், இந்த வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு வேடிக்கை காத்திருக்கிறது. எந்தெந்த அதிகாரிகள் சோதனை யிட்டார்கள் என்பது எனக்கு தெரியும். அவர்கள் எங்கேயும் ஓடி ஒளிய முடியாது. அவர்களை சோனியா, சிதம்பரத்தால் காப்பாற்ற முடியாது." என்று கட்கரி சொல்லியிருப்பது, நாங்களும் இன்னொரு காங்கிரஸ்தான் என்று சொல்வது போல உள்ளது. மக்கள் எப்படி இவர்களை நம்பி ஓட்டு போடுவார்கள். 'காங்கிரசாவது சொல்லாமல் இதைச் செய்கிறது. நீங்கள் வந்தால் சொல்லிவிட்டே செய்வீர்கள் போல' என்று மக்களை பயமுறுத்துகிறது இவரது பேச்சு. இவரைப் போன்றோரை தலைவராக வைத்திருப்பது காங்கிரசின் எதிரணியை பலவீனமேப்படுத்தும்.