9 Jan 2013

தமிழ் இனியது

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி


- இது 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிலேடைக் கவி காளமேகம் அவர்கள் செய்யுள்.



மேற்கொண்ட செய்யுளை இப்படிப் படிக்க வேண்டும்.

தாதி தூதோ தீது தத்தை தூது ஓதாது
தூதி தூது ஒத்தித்த தூததே - தாது ஒத்த
துத்தி தத்தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்தது ஓதித் திதி


மேற்கண்ட வரிகளின் பொருள்

தாதி தூதோ தீது = வேலைக்காரியின் தூதோ தீதானது

தத்தை தூது ஓதாது = கிளி தூது சொல்லாது
தூதி தூது ஒத்தித்த தூததே = தோழி தூது போனால் அது ஒத்திப்போகும் தூதே
துதித்துத்தே தொத்தீது = தெய்வங்களை வணங்கினாலும் பலனிருக்காது.
தாது ஒத்த துத்தி தத்தாதே = மலர்களின் தாது ஒத்த தேமல் என் மேல் படராதிருக்க
தித்தித்தது ஓதித் திதி = இனியது ஏதாவது ஓது.

வேலைக்காரியின் தூதோ தீதானது,  கிளியோ தூது சொல்லாது, தோழி தூது போனால் அதுவும் ஒத்திக்கொண்டே போகும், தெய்வங்களை வணங்கினாலும் அதனால் பெரிய பலனிருக்காது. இந்தத் துன்பத்தினால் மலர்களின் தாது ஒத்த தேமல் என் மேல் படராதிருக்க இனியது ஏதாவது நீ ஓதமாட்டாயா?

இப்படியும் பொருள் கூறுகின்றனர்

தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் (இனித்தது) தித்தித்தது?) 

அடுத்த கவியைப் படியுங்கள்

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.


காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட கையாலாகிவிடக்கூடும். 

அவரது பாடல்கள் சிலவற்றை மேலும் கவனிப்போம்.

 பனை மரத்தையும், வேசி உறவையும் ஒப்பிட்டு ஒரு பாட்டு
கட்டி தளுவுவதால் கால் சேர ஏறுவதால்
எட்டி பன்னாடை இழுத்ததால் -முட்ட போய்
ஆசைவாய் கள்ளை அருந்துதலால்  அப்பனையும்
வேசையென விரைந்து


கட்டி பிடித்து மரத்தில் ஏறுவதாலும் அதேபோல் கால்களை பிணைத்து ஏறுவதாலும் ,மேலே சென்று மரத்தில் இருக்கும் பன்னாடைகளை இழுத்தாலும் .பின் அங்கெ இருக்கும் கள்ளை ஆசையுடன் அருந்துதல் . - இது பனைக்கு

கலவியின் போது எப்படி நடந்து கொள்ளுவதோ  அதை மரத்தில் மேல் ஏறுவதட்ட்கு ஒப்பிட்டு இருக்கிறார் .அவள் அணிந்து இருக்கும் ஆடைகளை அகற்றி ,ஆசையாய் வாயில் உள்ள உதட்டில் முத்தமிட்டு - இது வேசி சுகத்திற்கு

தென்னை மரத்தையும் பெண்ணையும் ஒப்பிட்டு ஒரு பாட்டு
பார தலைவிரிக்கும் பன்னாடை மேல் சுற்றும்
சோர இளநீர் சுமந்திருக்கும் -நேரேமேல்
ஏறி இறங்கவே இன்பமாம் தென்னை மரம்
கூறும் கணிகை ஒன்றேகாள் .

தமிழின் ஆழத்தையும் வன்மையையும் கண்டீரோ. இன்றும் பாட்டெழுதுகிறேன் பேர்விழி என்று எப்படிப்பட்ட பாட்டெல்லாம் எழுதுறோம். அதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் எப்படியெல்லாம் வசைபாடுகிறோம். தவறுக்குச் சமாதானம் கூற எவ்வாறெல்லாம் விழைகிறோம். இப்படி ஒரு பாட்டை நம்மால் படைக்க முடியமா? அல்லது இன்று நான் பெரிய கவிஞன் என்று மார்த்தட்டிக் கொள்பவர்கள் யாராலும் இப்படி ஒரு செய்யுளைப் படைக்க முடியுமா?

இந்தச் செய்யுட்களின் பொருள் எனக்கு விளங்க வில்லை. இதை இணையத்தில் தேடிக் கண்டெடுத்தேன். மேலும் சில விபரங்களும் கிடைத்தன அவை கீழே.

காளமேகம் 15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். சமண சமயத்தில் பிறந்த இவர், திருவானைக்கா கோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறினார். இவர் வசைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் இவர் பல சிறந்த நயம் மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார்.

திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் முதலியவை இவர் இயற்றிய நூல்களாகும்.